Vannathikkulam

இலங்கை அரசியல் வரலாற்றில் 1980 முதல் 1983 வரையிலான காலம் மிக முக்கியமானது. தமிழர்களுக்கு எதிரான இலங்கை இனவாத அரசின் வன்முறை உச்சத்தைத் தொட்டதும், இதன் காரணமாக ஆயுதம் ஏந்தியதும் இந்தக் காலகட்டத்தில்தான்.

புலிகளின் வளர்ச்சி, தமிழ் இளைஞர்கள் குடும்பங்களை விட்டு இயக்கத்தில் சேர்வது, ஆயுதக் குழுக்களுக்கு இடையே எழுந்த சகோதர யுத்தம், தமிழர்கள் மீதான தாக்குதல், யாழ்ப்பாண நூலகம் எரிப்பு என இலங்கைத் தீவே ரணகளமாக இருந்த நேரமது.

அந்தக் காலகட்டத்தில் ஒரு தமிழ் இளைஞனுக்கும், ஒரு சிங்களப் பெண்ணுக்கும் இடையே மலர்ந்த காதலை அழகான நாவலாக வடித்துள்ளார் டாக்டர் என்.நடேசன். இவர் ஆஸ்திரேலியாவில் வசிக்கும் இலங்கைத் தமிழர். தொழில் முறையில் இவர் ஒரு மிருக வைத்தியர். தன்னுடைய தொழிலையே நாவலின் கதாநாயகனுக்கும் கொடுத்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இருந்து சிங்களர்கள் அதிகம் வசிக்கும் மதவாச்சி என்ற இடத்துக்கு மிருக வைத்தியத் தொழில் செய்ய செல்லும் சூரியன்தான் கதையின் நாயகன். தான் தங்கும் விடுதியில் வசிக்கும் ருக்மன் என்ற சிங்கள இளைஞரின் தங்கை சித்ராவை இவர் காதலிப்பதும், அதனையொட்டி நிகழும் சம்பவங்களும் நாவலாக்கப்பட்டுள்ளன.

பிரச்சினைக்குரிய கருத்தைப் பின்புலமாக வைத்துக் கொண்டு, அதில் ஒரு காதலைச் சொல்லுவது இயக்குநர் மணிரத்னத்தின் பாணி. அத்தகைய பாணிக் கதைதான் இது என்றாலும், மணிரத்னத்தை நடேசன் பின்பற்றுகிறார் என்று சொல்லத்தகாது. ஏனெனில் இக் கதையை 15 வருடங்களுக்கு முன்பே தான் எழுதியதாகவும், இதுதான் தன்னுடைய எழுத்துலக அரிச்சுவடி என்றும் நடேசன், என்னுரையில் குறிப்பிட்டுள்ளார்.

வண்ணாத்திக்குளம் இவரது முதல் நாவல் என்பதை, இவரது தற்போதைய படைப்புகளை வாசிக்கும் எவரும் ஒத்துக் கொள்வர். இந்தப் புத்தக்கத்துக்கு சிறப்பான முன்னுரை எழுதிய டி.பி.எஸ்.ஜெயராஜ் குறிப்பிட்டபடி, பிரச்சார நெடி மிகுந்த பாத்திரங்களை உலவ விடக் கூடிய வாய்ப்பினை கதையின் போக்கு ஏற்படுத்திக் கொடுத்தபோதிலும் நடேசன் அதை கவனமாகத் தவிர்த்துள்ளார்.

அதேபோல் இலங்கைப் பிரச்சினையைப் பின்புலமாக வைத்து எழுதும்போது, அதுவும் ஒரு தமிழர் எழுதும்போது, சிங்கள மக்கள் அனைவரையும் இனவாதிகள் என்ற ரீதியில் சித்தரிக்கும் வாய்ப்பிருந்தும் அதையும் கவனமாகத் தவிர்த்துள்ளார். கலவர நேரத்தில் கதாநாயகன் சூரியனுக்கு பல சிங்களர்கள் மனிதாபிமானத்துடன் உதவி செய்வதை கோடிட்டு காட்டுவதன் மூலம் ஒரு சார்பாக இந்த விஷயத்தை இவர் அணுகவில்லை என்பது புலனாகும்.

நாவலில் காதல்தான் பிரதான விஷயம். அதற்கு ஊடாகச் செல்லும் நூலாகத்தான் இலங்கைப் பிரச்சினை உள்ளது. அதனால் ஒரு நல்ல காதல் கதையை வாசித்த திருப்தியைத் தருகிறது வண்ணாத்திக்குளம். காதல் பகுதிகளில் ஆசிரியரின் சிருங்கார ரசம் நயமாக வெளிப்படுகிறது.

அவளுடைய கண்களின் இமைகளாக இரண்டு வண்ணத்திப்பூச்சிகள் ஒட்டப்பட்டிருக்குமோ என நினைத்தேன் என்ற வரியிலும்,

சித்ராவின் வட்டமுகமும், நீளவிழிகளும் சமவெளியில் தழுவிக் கொண்டு சத்தமில்லாமல் ஓடும் ஆற்றின் ஓட்டத்தைப் போல் இருந்தது என்ற வரியிலும் வர்ணனை தன்னளவில் உச்சத்தை எட்டியுள்ளது.

சூரியன் என்ற பாத்திரத்தின் தன்மையில் கதை விவரிக்கப்படுவதால், ஒரு இலங்கைத் தமிழரின் மூன்று ஆண்டுகால சுயசரிதையைப் படித்த உணர்வு ஏற்படுகிறது. நாவல் என்ற கட்டமைப்பிற்கு உண்டான இலக்கணங்கள் இல்லாவிட்டாலும், கதையில் இருக்கும் சத்தியம் அதற்கு உயிரோட்டத்தைக் கொடுத்துவிடுகிறது. பிரச்சினையின் தீவிரத்துக்குள் முழுமையாக நுழையாமல், சூரியனின் வாழ்க்கையைப் பின்தொடர்ந்து கதை செல்வதில் நாவல் ஆசிரியரின் சாமர்த்தியம் தெரிகிறது.

பிழைகள் அதிகம் இன்றி இதைப் பதிப்பித்திருக்கிறது மித்ர ஆர்ட்ஸ் கிரியேஷன்ஸ்.

இந் நாவலைப் படிக்கும் எவரும் ஒரு நல்ல காதலை அருகில் இருந்து பார்த்த உணர்வைப் பெறுவது நிச்சயம். அதுதான் ஆசிரியர் டாக்டர் என். நடேனுக்குக் கிடைத்த வெற்றியாகும்.

(வண்ணாத்திக்குளம்: டாக்டர் என்.நடேசன், மித்ர ஆர்ட்ஸ் கிரியேஷன்ஸ், 32ஃ9 ஆற்காடு சாலை, சென்னை24 பக்கங்கள்: 144, விலை ரூ.50)


Copyright 2001-2008 by Dr.Nadesan. Click here & E-Mail us your comments. All Rights Reserved.